மு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
சென்னை: உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்ப பெற்றார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தாக புகார் எழுந்தது.
மேலும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கோரியும் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி துறை முறைகேடுகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
தேர்தல் நேரத்தில், உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் வேலுமணி, ஒருவேளை குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியை துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியை தர வேண்டும் என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.