கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி, கல்லூரிகள், கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது... அதேபோல மத்திய அரசும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது... ஆனால் அந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட பெற்றோரிடம், கட்டணங்களை செலுத்தும்படி தனியார் பள்ளி - கல்லூரிகள் நெருக்கடி கொடுப்பது குறித்து புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
எல்லை காக்க வீரமரணம்: 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு வந்தே மாதரம் பாடி அஞ்சலி
ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணங்களை வசூலிக்க கூடாது என பஞ்சாப், டில்லி, அசாம், மகாராஷ்டிரா மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக கட்டணத்தை செலுத்தக் கூறுவதாகவும், அதன்காரணமாக கட்டண விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.