பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு... ரஜினிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை (மார்ச் 9) சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் பொன்விழா ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றார்கள். செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது என்றார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ரஜினிகாந்த் பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் , பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.
உமாபதியின் மனு, நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உமாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துக்ளக் இதழில் ராமர் சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு சென்றது தொடர்பாக எந்த ஆதார புகைப்படமும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளார் .
தண்ணீர் போராளி முதல் ஏழைகளின் பசியாற்றிய சினேகா வரை.. பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்கள்
Recommended Video
வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மத உணர்வுகளை தூண்டி பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவித்து வன்முறையை தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைப்பதாக நீதிபதி ரோஸ்லின் அறிவித்தார். எனவே நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.