திமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்?.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!
திமுக கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற 4 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் தொடுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: திமுக கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற 4எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் தொடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 38 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் திமுக கூட்டணி வென்றது. இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றியும் பெற்றது.
சட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு
யார் எல்லாம்
அதன்படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ், இந்திய ஜன நாயகக் கட்சி பாரிவேந்தர், மதிமுக கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் ஆகியோர் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர். தற்போது இவர்கள் எம்பிக்களாக இருக்கிறார்கள்.
பதவிக்கு எதிர்ப்பு
இவர்களின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று இப்போது பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ரவி இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
தேர்தல்
தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சியில் இருக்கும் நபர் இன்னொரு கட்சிக்காக போட்டியிட முடியாது. இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இதே போலதான். இவர்கள் 4 பேரின் வெற்றி என்பது விதிக்கு எதிரானது. அதனால் இவர்களின் வெற்றியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.
பதில்
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், நாங்கள் இவர்களின் மனுவை சரி பார்த்துதான் ஏற்றுக்கொண்டோம். அதனால் இதில் தவறில்லை. இதை தேர்தல் வழக்காக வேண்டுமானால் விசாரிக்கலாம். ஆனால் பொது நலவழக்காக விசாரிக்க கூடாது. இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
நோட்டீஸ்
இந்த நிலையில் வழக்கில் நான்கு எம்பிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் திமுக கட்சிக்கும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 எம்பிக்களின் பதவி குறித்த கேள்வி எழுந்துள்ளது.