ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் சீமான் பேசியதற்கு எதிராக போலீசில் 2 வழக்கு பதியப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு எதிராக போலீசில் 2 வழக்கு பதியப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரின் இந்த கருத்துக்கள் இணையத்தில் பெரிய சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு இருந்தது .
என்ன நியாயம்
சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர், ஒரு காலம் வரும், வரலாறு மாற்றி எழுதப்படும் என்று பேசியவர், கோபமாக சில கருத்துக்களை கூறினார்.
|
காங்கிரஸ் கோபம்
இதற்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டு கொள்கிறேன்.
|
கடும் கோபம் டிவிட்
இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர் #ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை ராஜீவ் காந்தி, என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
என்ன வழக்கு
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 பிரிவு
2 பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி போலீஸ் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். இதனால் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.