வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முடிவு.. சென்னை ஹைகோர்ட்ல பொதுநல வழக்கு!
சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாயத்திற்கு நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட, 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.
இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருகிறார்கள். சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வேடந்தாங்கலின் பரப்பை குறைக்க தடை விதிக்க கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், வேடந்தாங்கல் சரணாயத்தின் பரப்பு 29.51 ஹெக்டேர்.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை கால அவகாசம்
கடந்த 1996ல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தை சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோமீட்டரில் இருந்து 3 கிலோமீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான உத்தரவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்தி்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும்.இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
எற்கனவே இதே போன்று சண்டிகர் அருகேயுள்ள சுக்னா ஏரி மற்றும் சரணாலய பகுதியில் டாடா நிறுவனத்திற்கு வீடு கட்டும் திட்டத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.