தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளராக மாவட்ட நீதிபதியை நியமிக்க தடை கோரி வழக்கு
சென்னை: தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளராக மாவட்ட நீதிபதியை நியமிக்க தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு பதிவாளராக உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் அல்லது சார்பு நீதிபதியை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக, மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் கடந்த 2015ல் விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்காமல், பதிவாளர் நியமன விதிகளில் திருத்தம் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையத்தின் முன்னாள் தலைவர் சுப்புராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நிர்வாக பணியான பதிவாளர் பணிக்கு, மாவட்ட நீதிபதியாக பணியாற்றுபவரை நியமிக்க அவசியமில்லை என்பதால், 2015ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய மனு.. நாளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் வாதிடுகையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் முன்னாள் தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் தெரிவித்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, நவம்பர் 6 ம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்க கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.