கோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் "கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 22 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் ,மதுக்கரை ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
குறிப்பாக ஜக்கனேரி-வேதார், கல்லாறு- நெல்லிதுறை, ஆனைகட்டி- வீரபாண்டி, மருதமலை- தனி கண்டி, வாளையார் கல்கொதி யானை வழித்தடங்கள் உள்ளது. தடாகம் பகுதியில் யானை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி, ஆனால் அங்கு தற்போது அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளது.
இதனால் யானை வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தடாகம் பகுதியில் விநாயகம் என்று யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல் சின்னத்தம்பி யானை உடுமலைப்பேட்டை பகுதியில் நுழைந்து சேதப்படுத்தியது.
தேர்வு முறையில் புதிய விதிமுறை.. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 100 யானைகள் இறந்துள்ளது. கடந்த 2011 முதல் 2018 வரை யானை தாக்குதலால் 77 பேர் இறந்தது. 61 பேர் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 27 பேர் யானை தாக்கி பலியானதாக வனத்துறையே உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீலகிரி வனப்பகுதியில் யானை வழித்தடங்களை பாதுகாக்க உத்தரவிட்டதைப்போல், கோவையிலும் யானை வழித்தடத்தை கண்டறிந்து அது பாதுகாக்கப்பட உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கேட்டுக்கொண்டார் .
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து வனத்துறையின் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கனிமவளத்துறை செயலாளர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்