கொரோனா பாதிப்பு.. தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கொரோனா பாதிப்பினால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முக கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதார துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 222 பேரின் 166 பேருக்கு கொரோனா இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 19.30 லட்சம் முக கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகள் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477, 104 ஆகிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 189780 பயணிகளில் 2984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்திவைத்துள்ளோம் என தெரிவித்தார். முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10,11,12- ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பயன்படும் முக கவசம் மற்றும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அவற்றின் இருப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்தும் 10, 11, 12 வகுப்புகளுக்கு நடந்து வரும் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்தும் மார்ச் 23-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.