அபராதம் போதாது.. அதிக கட்டணம் வசூலித்தால் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யணும்.. ஹைகோர்டில் வழக்கு
சென்னை: அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யகோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசாணை பிறப்பிக்கபட்டது.
இருப்பினும் இந்த கட்டணத்திற்கு கூடுதலாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கபடுவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டுமென கோயம்பத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்டத்திற்கு முரணாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை எனவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டபட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், இந்த மனுவுக்கு டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக போக்குவரத்து துறை செயலர், போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.