போலீஸாரிடம் அடாவடி பேச்சு.. திமுக பெண் பிரமுகர் மீது பாய்ந்தது வழக்கு
திமுக பெண் பிரமுகர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ''எதுக்குடா நீங்க இங்க நிக்கிறீங்க... பாதுகாப்பு கொடுக்கத்தான் நிக்கிறீங்க''என்று போலீசாரை மிரட்டிய திமுக பெண் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டதால், மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது ஒரு பெண் பிரமுகர் அவசர அவசரமாக வந்தார். அவர் வரும்போதே லேட்டாகத்தான் வந்தார். கையில் இருந்த அழைப்பிதழை அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரிடம் காட்டி உள்ளே அனுமதிக்குமாறு சொன்னார்.
திட்ட ஆரம்பித்தார்
அதற்கு போலீசார், "உள்ளே நாங்கள் உங்களை அனுமதித்தாலும், சோனியாவின் பாதுகாப்புக்கு வந்தவர்கள் விடமாட்டார்கள் என்று சொல்லி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த பெண் அங்கிருந்தோரை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்து விட்டார். இதனால் அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு போலீசார் அந்த பெண்ணிடம் சொன்னார்கள்.
எதுக்கு நிக்கறீங்க?
அதற்கு அந்த பெண், ''யார் கிளம்பணும், நாங்க கிளம்பறதுக்கு வரவில்லை, கையில இன்விடேஷனோடு வந்திருக்கோம், வேலை மெனக்கெட்டா அங்கிருந்து வர்றோம் என்று கேட்டார். பின்னர், திமுக தொண்டரணியினரைப் பார்த்து, ''எதுக்குடா நீங்க இங்க நிக்கிறீங்க பாதுகாப்பு கொடுக்கத்தான் நிக்கிறீங்க'' என திட்ட ஆரம்பித்தார்.
போலீசில் புகார்
இந்த காட்சி 2 நாளாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, போலீஸாரை தரக்குறைவாக திட்டிய அந்த பெண் பிரமுகர் மீது பெண் உதவி ஆய்வாளர் மணிமேகலை, அண்ணாசாலை போலீசில் புகார் அளித்தார்.
தேடி வருகிறார்கள்
அதனடிப்படையில், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது அந்த பெண் பிரமுகர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்பதால், அவரை தீவிரமாகவும் தேடி வருகிறார்கள்.