காசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு
Recommended Video
சென்னை: தங்க.தமிழ்ச்செல்வனை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக அமமுக கட்சியை சேர்ந்த வெற்றிவேல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை மிக காட்டமாக விமர்சித்து பேசும் தொலைபேசி உரையாடலின் ஆடியோ கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியானது.
அதில் டிடிவி தினகரனை கோழைத்தனமாக அரசியல் செய்வதாக சாடியிருந்தார் தங்க.தமிழ்ச்செல்வன். அந்த ஆடியோவானது டிடிவின் பிஏவிடம் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியது என கூறப்படுகிறது.
இந்த ஆடியோ ரிலீஸானதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி, தான் யாருக்கும் அஞ்சி நடவடிக்கை எடுக்க தயங்கியதில்லை. விரைவில் தங்க.தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்காக வேறு சில முக்கிய பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்.
அந்த பணிகளையெல்லாம் முடித்து விட்டு தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார். மேலும் தன்னை பார்த்தால் பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார் தங்க.தமிழ்ச்செல்வன் என கூறினார் டிடிவி.
இந்நிலையில் தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தரப்பு இடையே இரு நாட்களாக வார்த்தை போர் நீடித்து வருகிறது. இதனிடையே தங்க.தமிழ்ச்செல்வன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக மூத்த தலைவரான வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை போய்க் கொண்டிருக்கிறது.
எம்எல்ஏ என்பது நிரந்தரமாக எழுதி கொடுக்கப்பட்ட பதவி அல்ல. ஆனால் எம்எல்ஏ பதவி போய்விட்டதாக குழந்தை போல அடம் பிடித்து பேசி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.
அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என சாடினார். மேலும் பேசிய வெற்றிவேல், எம்.பி பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேரம் பேசி வருவதாக குறிப்பிட்டார்.
மாற்றி மாற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், இவ்வளவு நாள் அமைதியாக இருந்து விட்டு தற்போது திடீரென அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2009-ல் தோல்வியை சந்தித்தபோது ஜெயலலிதாவையே தவறாக பேசியவர் தான் இந்த தங்க.தமிழ்ச்செல்வன். அவருக்கு தற்போது புத்தி பேதலித்து விட்டது. பணத்துக்காக ஏதோ ஒரு கட்சியில் துண்டு போட்டுவிட்டார் என மிக கடுமையாக விமர்சித்துள்ளார் வெற்றிவேல்.
திமுகவுடன் இணைந்து அதிமுக அரசை வீழ்த்துவோம் என தங்க.தமிழ்ச்செல்வன் கூறியது சரியல்ல. மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவேன் என தமிழ்ச்செல்வனிடம் டிடிவி ஏற்கனவே கூறிவிட்டார் என்றார் வெற்றிவேல். காசு, பணம், துட்டுக்காக அமமுக-வையும், தினகரனையும் தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் வெற்றிவேல்.
இதற்கு முன்னர் ஒரு பேட்டியின் போது தங்க.தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை,அவரை உரிய மருத்துவரிடம் சேர்த்தால் நல்லது என வெற்றிவேல் விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.