சாதி வெறியில் சிக்கிய ராஜேஸ்வரி.. அவரையும் விடாத பாஜக.. டக்குன்னு கட்சியில் சேர்த்து இன்ப அதிர்ச்சி!
ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஜகவில் இணைந்தார்
சென்னை: தரையில் உட்கார வைத்து, அவமானப்படுத்தப்பட்ட தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி... பட்டியலினத்தை சேர்ந்தவர். துணைத்தலைவராக இருப்பவர் மோகன். கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி ஊராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் உட்கார வைத்துள்ளனர்.. அந்த போட்டோவில் மற்ற எல்லாருமே சேரில் உட்கார்ந்திருக்க, தலைவரான ராஜேஸ்வரி மட்டும் தரையில் ஒரு ஓரமாக வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கிறார்.. இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவி பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை பற்றி ராஜேஸ்வரி சொல்லும்போது,"பஞ்சாயத்து கூட்டத்தின்போதெல்லாம் தரையில்தான் நீ உட்காரணும்னு , எதுவா இருந்தாலும் நான்தான் செய்வேன் என்று மோகன் சொல்லிடுவார்.. அதனால எப்பவுமே நான் கீழேதான் உட்கார்ந்திருப்பேன்..கொடி ஏத்தும்போதுகூட என்னை ஏத்தவே விடமாட்டார்.. அவர்தான் ஏத்துவார்.. ஒரு அளவுக்கு மேல என்னால தாங்க முடியாமதான் ஸ்டேஷன் வரை வந்து புகார் தந்துட்டேன் என்றார்.
இதையடுத்து, ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மோகன் மீது புவனகிரி போலீசில் ராஜேஸ்வரி புகார் அளிக்கவும் அதிரடி நடவடிக்கைகள், விசாரணைகள், சஸ்பெண்ட்டுகள் என அடுத்தடுத்து நடந்தன... ஆனால், இதுபோன்றே ஊராட்சி மன்ற தலைவிகள் கடந்த சில மாதங்களில் அவமானப்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டிருந்தார். இதற்கு பிறகு, சுல்தான்பேட்டையில் பக்கம், ஜே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா அவமானப்படுத்தப்பட்டார்.ஆனால், அதற்கெல்லாம் பொங்கா கட்சிகள் ராஜேஸ்வரி விஷயத்துக்கு மட்டும் அதிகமாக கொந்தளித்தன.. இதற்கு காரணம், புகாருக்கு உள்ளானவர் திமுக நிர்வாகி என்பதால்தான்.
எனினும், திமுக தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டு, "சமத்துவத்திற்கும் - ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை" என்று தெளிவுபடுத்தி இருந்தார்
இதற்கு எல்.முருகனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். "ஜாதி மதங்களை கடந்து மக்கள் பணியாற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்வரக்கூடிய ராஜேஸ்வரி போன்ற சகோதரிகளே அவமானப்படுத்துவதை இனிமேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது" என்று கூறியிருந்தார். ஒரே சமூகம் என்பதால் எல்.முருகன் இவ்வாறு ஆவேசமாக அறிக்கை விட்டாரா? அல்லது சம்பந்தப்பட்டவர் திமுக நிர்வாகி என்பதால் அறிக்கை வெளியிட்டாரா தெரியவில்லை.. இப்போது ராஜேஸ்வரி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் ஒன்று நமக்கு புரிகிறது.. தேர்தல் சமயத்தில் யார் பாதிக்கப்பட்டாலும், எல்லா கட்சிக்காரர்களும் உடனடியாக குரல் கொடுப்பார்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களை ஓடிவந்து தாங்கி பிடித்து தங்கள் கட்சியில் இணைத்து கொள்வதில் பாஜக படுமும்முரமாக உள்ளதும் என்பதும் தெளிவாகிறது.