ஜாதியைக் காட்டி ஊராட்சி தலைவரை தரையில் அமர வைப்பதா? கண்டிக்கத் தக்க கொடூர செயல்.. சதீஷ் கொதிப்பு
சென்னை: ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல் என நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது தெற்குத்திட்டை ஊராட்சி. இங்கு தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். துணை தலைவராக மோகன்ராஜ் இருந்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரியை தரையில் உட்காரவைத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் நேற்று முன்தினம் வைரலானது.
தரையில் அமர வைக்கப்பட்டு... பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமானம்.. சிந்துஜா கைது!!
ஊராட்சி செயலர் மீது
இதையடுத்து, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சரவணகுமார் ஆகிய இருவரையும் புவனகிரி இன்ஸ்பெக்டர் ராபின்சன் நேற்று அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இரு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
4 பேரிடம் நடந்த விசாரணை
இந்த விவகாரம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோர் தெற்குத்திட்டை கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போத ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் 4 உறுப்பினர்கள் விசாரணைக்கு வந்தனர். துணை தலைவர் மோகன்ராஜ் மட்டும் வரவில்லை.
சிந்துஜா கைது
விசாரணைக்கு பின்னர் ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை ஊரக வளர்ச்சித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அடுத்த சிலமணிநேரத்தில் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புவனகிரி போலீஸ் கைது செய்தது. ஊராட்சியின் 6வது வார்டு உறுப்பினர் சுகுமாரும் (37) வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தலைமறைவான துணை தலைவர் மோகன்ராஜை தேடி வருகிறார்கள்.
துணை தலைவர் மீது புகார்
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தனக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறுகையில், ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்தார். இதை வெளியே சொன்னால் ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்ற பயத்தில் நானும் வெளியில் சொல்லவில்லை. ஊராட்சி கூட்டத்தில் கீழே தரையில் உட்கார வைப்பது, தேசியக் கொடியை ஏற்றவிடாமல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். நான் மக்களுக்கு சேவையாற்றவே பொதுமக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டேன். ஆனால், ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்றார்.
அனைவரும் சமம்
இந்நிலையில் தலித் என்று சாதி அடையாளத்தை காரணம்காட்டி ஊராட்சி தலைவருக்கு எதிராக நடந்த அவலத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள். நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில். "ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்" என்று கூறியுள்ளார்.