காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மத்திய அரசுக்கு பொளேர் பதிலடி தந்த அதிமுக அரசு
சென்னை: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசுடன் நேரடியாக மோதுவதற்கு அதிமுக அரசு தயாராகிவிட்டது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான தயாரிப்புகள் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டன. சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் தனி அணியை உருவாக்குவார் என்றும் அதில் பாமக இடம்பெறும் என்கிற செய்திகள் அதிமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்
அதிமுக ப்ளஸ் பாமக
கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருக்கும் அதிமுக வடதமிழகத்தில் பாமகவை முழுமையான பயன்படுத்தினால் பிரமாண்ட வெற்றியை பெற முடியும். திமுகவுக்கு வடதமிழகத்தில் இருக்கும் செல்வாக்கை தோற்கடிக்க அதிமுக- பாமக அணியால் முடியும் என்பதற்கு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நல்ல உதாரணம். இதனால்தான் பாமகவை கூட்டணியில் தக்க வைக்க அதிமுக பகீரத பிரயத்தனங்களை செய்து வருகிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
இதில் ஒன்றாகவும் பாமகவின் நீண்டகால கோரிக்கையான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் வேறு 2 காரணங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் அறிவிப்பின் பின்னால் இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
மத்திய அரசுக்கு பதிலடி
அண்மையில் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநில அரசுகளின் அனுமதி தேவை இல்லை என அறிவித்தது மத்திய அரசு. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு தாம் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற நினைப்பதை அதிமுக அரசு விரும்பவே இல்லையாம். தங்களது அதிகாரத்தை பகிரங்கமாக பறித்த மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக திடீரென அறிவித்துள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சட்டசபை தேர்தல் பிரசாரம்
சட்டசபையில் இதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவில் இருந்து மத்திய அரசின் அத்தனை திட்டங்களும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற நேரிடும். இத்தனை ஆண்டுகாலமாக மத்திய அரசுக்கு எடுபிடி அரசாக இருப்பதாக ஏகடியம் பேசிய எதிர்க்கட்சிகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்து ஜெயலலிதாவைப் போல துணிச்சலுடன் மத்திய அரசை எதிர்த்தோம் என சட்டசபை தேர்தல் வலிமையாக பிரசாரம் செய்ய முடியும் என்பதும் அதிமுகவின் கணக்காம்.
காவிரி டெல்டா வாக்குகள்
அதேபோல் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அதிமுக அரசு எதிரானது என திமுக கட்டமைத்துள்ள பிம்பத்தை சுக்கு நூறாக தகர்க்கவும் இந்த அறிவிப்பு பயன்படும் என்பது மற்றொரு கணக்கு. காவிரி டெல்டாவில் ஜாதியின் பெயரால் உறவுகளின் பெயரால் தினகரனுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இத்தகைய அறிவிப்பால் இல்லாமலேயே செய்துவிட்டார் முதல்வர் என பூரிக்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். ஆக ஒரே கல்லில் 3 மாங்காய்களை வீழ்த்தி மகத்தான வெற்றிக்கு பிள்ளையார் சுழியை போட்டுவிட்டார் முதல்வர் எடப்பாடியார் என கெத்து காட்டுகிறது அதிமுக.