காவிரிக்காக போர்க்குரல் எழுப்பிய... காவிரி உரிமை மீட்புக்குழு... கருப்புச் சின்னத்துடன் போராட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு செல்லும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பாக தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட அமைப்புகள் உள்ளடங்கிய காவிரி மீட்புக் குழுவினர் அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்காக முழக்கம் எழுப்பினர்.
இன்று மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் சுமார் 15 நிமிடங்கள் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
காவிரிக்காக குரல்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். அவருடன் அவரது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் கோரிக்கை முழக்கம் எழுப்பினர். மத்திய அரசின் முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
கருப்புச்சட்டை
இதேபோல் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி முழக்கமிட்டார். அவருடன் தோப்புத்துறை கிராம மக்களும் ஒன்றிணைந்து அவரவர் வீடுகளுக்கு முன்பு சமூக விலகலை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தனியரசு முழக்கம்
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளுக்கு முன்பு நின்று காவிரிக்காக குரல் கொடுத்தனர். கருணாஸை பொறுத்தவரை தனது மனைவி மற்றும் மகனுடன் கருப்புச்சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். காவிரி உரிமையை மத்திய அரசு பறிப்பதாக கருணாஸ் முழக்கம் எழுப்பினார்.
ஆங்காங்கு ஆர்ப்பாட்டம்
மேலும், இந்த அமைப்புகளை தவிர காவிரி உரிமை மீட்பு குழுவில் அங்கம் வகிக்கும் நாம் தமிழர் கட்சி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாகவும் ஆங்காங்கு கருப்புச்சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அமைச்சகத்தின் கீழ் முடக்கக்கூடாது என்றும், தமிழர்களின் உரிமையை பறிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.