அதிர வைத்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மோசடி... தொடங்கியது சிபிசிஐடி விசாரணை!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 6491 பணியிடங்களுக்கான இத்தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போது கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் மட்டும் முதல் 100 இடங்களை பிடித்தனர்.
முறைகேடுகளால்தான் இது சாத்தியம் என்று கல்வியாளர்கள் புகார் தெரிவித்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
சி.ஏ.ஏ.வை ஆதரிப்பதா? தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்
இவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இவர்களுக்கு தனி தேர்வும் நடத்தப்பட்டது. இதன் முடிவில் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானது.
இதனையடுத்து டிஜிபி திரிபாதியிடம் இம்முறைகேடுக்ள் தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் புகார் கொடுத்தது. இப்புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார்.
இதனடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதியோரில் 57 பேர் மற்றும் அத்தேர்வு மையங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகுமா? அல்லது புதிய பட்டியலை தேர்வாணையம் வெளியிடுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.