நில மோசடி வழக்கு.. திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியனுக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை
சென்னை: அரசு நிலத்தை அபகரித்த வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
பொய் ஆவணம் புனைந்து மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்த்தீபன் என்பவர் கொடுத்த புாகரின் பேரில் சைதாப்பேட்டை தொகுதி, சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, கிண்டி சிட்கோவிற்கு சொந்தமாக இரண்டு தொழிலாளர் குடியிருப்புகளை சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமித்ததாக, 2019ம் ஆண்டு, ஜூன் 3ம் தேதி, கிண்டி காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணை முடிந்து, நவம்பர் 2ம் தேதி, மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது பொய் ஆவணம் புனைந்து மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல், ஆகிய இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ், XI வது பெருநகர் குற்றவியல் நடுவர், சைதாப்பேட்டை, அவர்கள் முன்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.