மீண்டும் ரெய்டு!2015 முதல் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை துரத்தும் சிபிஐ, ஐடி, அமலாக்கப் பிரிவு!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் விசாரணை நிறுவனங்கள் 6-வது முறையாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துகின்றன.
Recommended Video
சாப்பிட்டு 6 மாதமாச்சு.. வாந்தி வருது.. உலகில் வாழ ஆசை இல்லை.. கவலைபடாதீர்.. நித்திக்கு என்னாச்சு?
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு. இந்த வழக்கின் பூர்வோத்திரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முந்தையது. அதாவது 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தார்.
வழக்கு என்ன?
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் மொரீஷியஸின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிட்டட், இந்தியாவின் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. நிதி அமைச்சரால் ரூ600 கோடி வரை வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க முடியும்; ஆனால் ரூ3,200 கோடி வெளிநாட்டு முதலீட்டுக்கு சிதம்பரம் அனுமதி அளித்தார்; இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு. அன்று தொடங்கிய வழக்கு இன்றளவும் நீடித்து கொண்டே இருக்கிறது.
சிபிஐ ரெய்டு
2017-ம் ஆண்டு மே 16-ந் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக 2015-ல் 2 முறை சோதனைகள் நடைபெற்றன. சென்னை, டெல்லி, குருகிராம், மும்பை என பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சிபிஐ தொடர்ந்து அமலாக்கப் பிரிவினரும் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
கார்த்தி சிதம்பரம் கைது
2018-ம் ஆண்டு ப.சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் 2018-ல்தான் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யபப்ட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். மேலும் இவ்வழக்குகளில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
மீண்டும் ரெய்டு
2019: சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். சென்னை, சிவகங்கை உட்பட 14 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலையானார்.
சிபிஐ புதிய வழக்கு
இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெறும் நிலையில் தற்போது 6-வது முறையாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளது. ஆனால் இம்முறை சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 250 சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் இந்தியாவில் பணிசெய்வதற்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத் தந்தார் கார்த்தி சிதம்பரம்; இதற்காக ரூ50 லட்சம் லஞ்சம் பெற்றார் என புதிய வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில்தான் இன்று சிபிஐ சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தியது. பஞ்சாப்பில் சீனர்கள் பணி செய்வதற்காக சட்டவிரோதமாக விசாக்களை கார்த்தி சிதம்பரம் பெற்று தந்தார் என்கிறது இந்த வழக்கு