கொடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுங்கள்.. திவாகரன் பரபர கோரிக்கை
கொடநாடு கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
கொடநாடு இல்லத்தில் நடத்த கொலைகள் மற்றும் கொள்ளைகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டு இருக்கும் ஆவணப்படத்தை அடுத்து இந்த பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது.
2017ல் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கு பின்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சாமுவேல் மேத்யூஸ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
தற்போது சாமுவேல் மேத்யூஸுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த பிரச்சனை பற்றி அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது இதுகுறித்து திவாகரனும் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும், சசிகலாவின் உறவினருமான திவாகரன் இதுகுறித்து கூறுகையில், இந்த குற்றச்சாட்டு எதன் அடிப்படையில் வைக்கப்படுகிறது என தெரியவில்லை. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.
இதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விவகாரத்தில் பொறுத்து இருந்துதான் விசாரணைகளை பார்க்க வேண்டும். அதன்பின்பே முடிவு செய்ய வேண்டும்.
இதில் கண்டிப்பாக உண்மைகளை மறைக்க முடியாது. எத்தனை பெரிய மனிதாராக் இருந்தாலும் இதில் யாரும் உண்மைகளை மறைக்க முடியாது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இதில் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பெயர் கூட அடிபடுகிறது. அதனால் இதை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்.