முதல்ல உதவியாளர் சரவணன்.. அடுத்த குறி விஜயபாஸ்கரா.. ஸ்கெட்ச் போடுகிறதா பாஜக?
விஜயபாஸ்கர் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளிவந்த நிலையில், அது கடைசியில் புரளி என்று தெரியவந்துள்ளது.
அன்று கேபி முனுசாமி பேசிய பேச்சின் வீரியம் இன்னும் குறையவில்லை.. பாஜகவின் குறி அதிமுகவையே மறைமுகமாக சுற்றி கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்புதான், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை விவகாரம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் என அடுத்தடுத்த ஷாக்கை அதிமுகவுக்கு தந்தது பாஜக.
அதிரடி
எதற்காக இந்த அதிரடி? ஒருவேளை சீட் விவகாரம் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் உள்ளிட்டவைகளில் பாஜக தரும் மறைமுகமோ அழுத்தமோ? அதனால்தான் அதிமுகவை பணிய வைக்க இதுபோன்ற நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளதோ என்றும் யூகிக்கப்பட்டது. அதற்கு ஒரு முடிவு தெரிவதற்கு முன்னமேயே இன்னொரு தகவலும் கசிந்தது.
விஜயபாஸ்கர்
அமைச்சர்கள் மீதும் பாஜக தலைமை கை வைக்க போகிறது என்றும், அந்த வகையில் முதல் நபரே டாக்டர் விஜயபாஸ்கர்தான்.. குட்கா விவகாரத்தில் மறுபடியும் இவருக்கு சம்மன் அனுப்ப போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், நடந்து கொண்டிருந்த விஷயங்களை பார்த்தால், அதிமுகவுக்கு எதிரான இன்னொரு அணுகுமுறையாகவே இது கருதப்பட்டது. இதற்கு அமித்ஷாவே சிக்னல் தந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
நேரில் ஆஜர்
அந்த விஷயம்தான் இப்போது வெடித்து கொண்டு வெளியே வந்துள்ளது.. விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் இருப்பதாக தகவல் வந்தது.. ஏற்கனவே விஜயபாஸ்கருக்கே இதே வழக்கு சம்பந்தமாக பல சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், விஜயபாஸ்கரும் பலமுறை நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அமைச்சர் பதவி போய்விடும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த நிலையிலும், அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கவே இல்லை.
சரவணன்
இப்போது மறுபடியும் பாஜக அதே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கேற்றார்போல, திருவாடனையில் உள்ள உதவியாளர் சரவணனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பதாக ஒருசில ஊடகங்கள் தகவலையும் நேற்று முதல் செய்திகளை வெளியிட்டன. கடந்த 2018-ம் ஆண்டிலும் விஜயபாஸ்கரை போலவே அவரது உதவியாளர்கள் சரவணன், சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.. ஆனால், அது என்ன ஆனது என்றே தெரியாத நிலையில்தான், இப்போது மறுபடியும் சரவணனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
டெல்லி
இதனால் நேற்று முதல் இன்றுவரை ஒருவித பரபரப்பும் தொற்றிக் கொண்டுவிட்டது. கூட்டணியில் எல்லாம் சுமூகமாகி விட்டது, ராசியாகி விட்டார்கள், முதல்வர் வேட்பாளர் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது, முதல்வரும் டெல்லிக்கு சென்றுள்ளார், நல்ல தகவலுடன் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்தான், இப்படி ஒரு ஷாக் தகவல் வட்டமடித்தது.
விசாரணை
ஒரு பக்கம் டெல்லியில் முதல்வருடன் ஆலோசனை, இன்னொரு பக்கம் அதிமுகவின் அடிவயிற்றிலேயே கை வைக்கும் சிபிஐ-ன் விசாரணை, கட்சிக்குள் பெரும் அதிர்வலையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், இவை அத்தனையும் புரளி என்றே தெரியவந்துள்ளது.. இது யார் கிளப்பி விட்ட வேலை என்றும் தெரியவில்லை..!