குட்கா வழக்கில் சிக்கும் தலைகள்.. விஜயபாஸ்கருக்கு செக்.. நாளை நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் புகையிலை கலந்து விற்கப்படும் பான்பராக் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, சேமித்து வைக்க, விற்பனை செய்ய, கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை அருகே குட்கா தயாரிப்பு ஆலைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதன் பின்னர், வருமான வரித்துறை தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன் தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் ஊடகங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் குட்கா
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபைக்கு உள்ளேயே குட்காவை எடுத்து வந்து தமிழக அரசை கடுமையாக சாடினார். மேலும் குட்கா விற்பனை செய்ய டிஜிபி டிகே ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், இதனை இருவருமே மறுத்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
இந்தநிலையில், வருமான வரிதுறை தமிழக அரசுக்கு குட்கா விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதம் மாயமானது. இதனால் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணை
இதற்கிடையே, வருமான வரித்துறை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்கா குடோன் உரிமையாளர்கள் பல்வேறு உண்மைகளை கக்கினர். இதனால் குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 31 இடங்களில் சோதனை நடத்தியது. தமிழக அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 25-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் உணவு பாதுகாப்பு, சுங்கத் துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது.
இருமுறை சம்மன்
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் சரவணனுக்கு இறுதி கெடு விதித்து சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கருக்கும் சம்மன்
அவர் ஆஜராகி விளக்கம் அளித்தால் இந்த வழக்கில் புதிய திருப்பங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் குட்கா முறைகேடு வழக்கு விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதே நேரம், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நேற்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.