டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மது கடைகளில், சுமார் மூன்றாயிரம் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் வரும் ஜூலை 10-ம் தேதி திறக்கப்படுகிறது.
டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு டாஸ்மாக் கடை மதுபாட்டில்களை சப்ளை செய்வது உள்ளிட்ட புகார்களும் நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்தனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 3,590 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இதில் சுமார் 3,000 டாஸ்மாக் கடைகளில் தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 6,000 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீடியோ மேனேஜ் மெண்ட் சிஸ்டம் என்ற பெயரில் கண்காணிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மண்டலம் மற்றும் தலைமை அலுவலகம் என்ற இரு அளவில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாக டாஸ்மாக் கடைகளில் நேர விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. பெட்டிக்கடை மற்றும் ஓட்டல்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட காரணம், டாஸ்மாக் கடை ஊழியர்கள் விதிமுறை மீறி பாட்டில்களை விற்பது தான் காரணம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து கேரளா, கர்நாடகா மாநிலங்களை போல வீடியோ மேனேஜ் மெண்ட் சிஸ்டம் முறையை தமிழக மதுக்கடைகளில் அறிமுகப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது.
எனினும் ஒப்பந்த நிறுவனங்களின் மதிப்பீடு தொகை அதிகமாக இருந்ததால் டெண்டரை இறுதி செய்ய இயலவில்லை என அப்போது காரணம் கூறப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக டாஸ்மாக்கில் சிசிடிவி கேமரா பொருத்த, டெண்டர் திறக்கப்பட உள்ளது. ரூ.15 கோடி செலவில் 3,000 டாஸ்மாக் கடைகளில், 6,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 2 கேமராக்கள் வீதம் 6 ஆயிரம் மேராக்கள் அமைக்கப்பட்டு, குரல் பதிவுடன் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலமாக அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே டாஸ்மாக் கடைகளின் விற்பனை நிலவரத்தை கண்காணித்து ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.