ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்
சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா விரைவில் பொருத்தப்படும் என, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், தேன்மொழி என்ற இளம்பெண் தனது காதலன் சுரேந்தர் என்பவனால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரிவாளால் வெட்டப்பட்டதில் தாடை, கை விரல்களில் காயமடைந்த தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இந்த கொடூர சம்பவத்தால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர்.
தேன்மொழியை வெட்டிய சுரேந்தர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேந்தரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற, சுவாதி படுகொலை சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த, பிரதான ரயில் நிலையத்தில் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை. அவர் வெட்டப்பட்டது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கென ஒரு குழுவும் அமைக்கப்பட்டு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலுமே சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. தேன்மொழி வெட்டப்பட்ட சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலும் ஒரு சில இடங்களில் சிசிடிவிகேமரா பொருத்தப்ப்டுள்ளது. எஞ்சியுள்ள இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த, நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தகவல் தெரிவித்த சைலேந்திர பாபு, தேன்மொழி - சுரேந்தர் இருவருக்குமிடையே தகராறு முற்றிய போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் சிறிது நேரத்திலயே மீண்டும் தகராறு முற்றியதால் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.