சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டுமே இரவிலும் கடைகளை திறக்க முடியும்.. காவல்துறை கெடுபிடி
சென்னை: இரவு முழுவதும் வணிக நிறுவனங்களை திறந்து வைக்க விரும்புகிறவர்கள், தங்களது நிறுவனங்கள் அல்லது கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. ஒரு பணியாளரை நாளொன்றுக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலையில் யில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றினார் என்றால் சம்பளத்துடன் கூடிய கூடுதல் பணியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பணியாளர்களுக்கு உரிய வேலை நேரம், இரவு நேர பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், குறிப்பாக பெண் பணியாளர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகள் இதற்காக விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலம் முழுவதும் உள்ள வணிகர்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசு விதித்துள்ள நிபந்தனைகளை வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள், 100 சதவீதம் கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல்துறை வட்டாரங்கள், தற்போது இரவு முழுவதும் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒன்றிலேயே, இரவில் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு தற்போதும் முழு அளவில் செயல்பாட்டில் உள்ளது. போலீஸ் துறையை பொறுத்த வரை அரசின் உத்தரவையும் அமல்படுத்த வேண்டும், அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, திருட்டை தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது என அனைத்திலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
இருப்பினும் அரசின் உத்தரவை முழுமையாக அமல்படுத்தவே நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளையும் நிறுவனங்களையும் திறக்க விரும்புவோா், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவுகளையும் பின்பற்றி, தங்கள் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்த பின்னரே, இரவிலும் செயல்பட நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அனுமதி வழங்க முடியும். இதற்காக மாவட்டங்கள்தோறும் வணிகர் சங்கங்களை அழைத்து கூட்டம் நடத்தி, உரிய அறிவுரைகளை வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ள நிலையில், மின் வினியோகம் தடைபடாமல் இருக்க பணியில் கூடுதல் மின் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.