வலியால் கத்தினான்.. காப்பாத்த முடியாம போச்சு.. கழுத்தெல்லாம் ரத்தம்.. அபினேஸ்வரனின் தந்தை கதறல்
மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியானது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியானது
Recommended Video
சென்னை: "வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு.. காப்பாத்த முடியாம போச்சு" என்று மாஞ்சா நூலுக்கு பலியான 3 வயது குழந்தையின் தந்தை கண்ணீருடன் கதறுகிறார். மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.
சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த கோபால். இவரது 3 வயது மகன் அபினேஷ்வரன். நேற்றிரவு பைக்கில் பின் பக்கம் மனைவி சுமித்ரா, முன்பக்கமாக குழந்தையை உட்கார வைத்து கொண்டு கோபால் வந்து கொண்டிருந்தார்.
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பாலம் மீது வரும்போது, ஒரு காற்றாடி மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துவிட்டது. இதில், வலியால் குழந்தை அலறித் துடிக்க.. ரத்தம் கொட்ட கொட்ட ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடியும் குழந்தை இறந்துவிட்டான்.
இது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூலையும் போலீசார் கைப்பற்றினர். இதனிடையே குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.
3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்
அதில் பிரிட்ஜ் மேல் பைக் வந்து கொண்டிருக்கிறது.. திடீரென குழந்தையின் தலை சாய்கிறது.. இதை பார்த்து பதறிய கோபால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்துகிறார். அதற்குள் அங்கு கார், பைக்குகளில் சென்று கொண்டிருந்தவர்கள் குழந்தையை காப்பாற்ற ஓடி வருகிறார்கள்.அந்த காட்சிதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
"வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு.. காப்பாத்த முடியாம போச்சு.. என் மகனே மாஞ்சா நூலுக்கு கடைசி பலியாக இருக்கட்டும்" என்று கண்ணீருடன் சொல்கிறார் கோபால்.
இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, மாஞ்சா நூல் விற்பனை குறித்து சென்னை முழுவதும் 15 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தி வருவதாகவும், மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்" என்றும் எச்சரித்துள்ளார்.