தீபாவளி.. குடும்பத்தோடு கொண்டாடுவோம்.. கொரோனாவையும் மனசுல வச்சுக்குவோம்!
சென்னை: தீபாவளி என்றாலே நம் கண்முன்னே வருவது புத்தாடை, பட்டாசு, உறவுகளின் வருகை. நம் எதிர்பார்ப்பு முழுவதையும் எதிராக மாற்றிவிட்டது நம் அழையா விருந்தாளியான கொரோனா.
இதுவரை நாம் சந்தித்த தீபாவளி இம்முறை கொரோனாவால் கூட்டுக் கொண்டாட்டத்தை தவிர்த்து உள்ளது. நம்மை எப்படியாவது ஆட்டுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மை சுற்றி அலைந்து கொண்டிருக்கும் கொரோனாவை அழிக்க நம்மால் முடியவில்லை.
விருந்தாளிகளை அரவணைத்து செல்லாமல் கவனமாக இருந்து விலக்கி வைப்போம். நம்மால் மட்டுமே தொற்று பரவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த தீபாவளிக்கு நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நாம் பார்ப்போம் .
சொந்த ஊரில் கொண்டாட்டம்:
வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி இருக்கும் மக்கள் பண்டிகை காலம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பர். எவ்வித தடையும் இன்றி வேகமாக சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களை கொரோனா அரக்கன் தடைவிதித்து, பயத்தை ஊட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் காலமாக தீபாவளி மாறி உள்ளது.
இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் தான். முடிந்தவரை நாம் இருக்கும் இடத்திலேயே பண்டிகையை கொண்டாடுவது சிறப்பு. முடியாதபட்சத்தில் ஊருக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்றால் , கவனத்தை மட்டும் கை விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவனத்தை கையாள வேண்டும் .ஒரு நிமிட கவனக்குறைவும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
ஊருக்கு கிளம்பும் முன் தேவையான பொருட்களை நன்கு பேக் பண்ணவேண்டும்.
- பயண நேரத்தில் தேவைப்படும் போர்வை ,குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தனியே ஒரு பையில் எடுத்து செல்லவேண்டும் மற்ற பைகளை எடுக்க வேண்டிய சூழலை தவிர்க்க வேண்டும்.
- முடிந்தவரை உணவுகளை வீட்டில் வைத்தே முடித்துவிடவேண்டும் வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல் வேண்டும்.
- எப்பொழுதும் சானிடைசர் கையில் வைத்திருத்தல் நல்லது எதைத் தொட்டாலும் சானிடைஸ் பண்ணிவிட வேண்டும்.
- டாக்ஸியில் சென்றால் ஏசி உபயோகத்தை தவிர்த்தல் நல்லது.
- பஸ் அல்லது ட்ரெயின் எதுவானாலும் இருக்கையில் அமரும் முன் ஸ்பிரே சானிடைஸ் பண்ணிய பிறகு உபயோகப்படுத்தவும்.
- குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய பழக்கப்படுத்தி வைத்திருப்பது வெளியே செல்லும்போது உபயோகப்படும்.
- குழந்தைகளுக்கு முழு நீளக் கை முழுக்கால் சட்டை, சாக்ஸ், கிளவுஸ் அணிய செய்து குழந்தைகளை பாதுகாத்தல் வேண்டும். குழந்தைகள் எதையாவது தொட்டுக் கொண்டே இருப்பர். எனவே உடனுக்குடன் கைகளை சானிடைஸ் பண்ணிவிட வேண்டும்.
புத்தாடை வாங்க செல்லும்போது கவனம்:
- வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு கடைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், பெரிய ஆபத்தின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
- புத்தாடை வாங்க செல்லும்பொழுது கூட்ட நெரிசலை தவிர்த்து கூட்டம் இல்லாத நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
- முடிந்தவரை குழந்தைகளை வீட்டில் பெரியவர்களிடம் விட்டுச் செல்லுதல் நல்லது.
பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட்டம்:
- ஒன்றாகக்கூடி புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடிய தீபாவளி இது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய சூழல்தான் .
- அவரவர் வீட்டில் புத்தாடை அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து கொண்டாடுவதே சிறப்பு.
- தீபாவளி என்றதும் இனிப்பு பலகாரம் தான் நினைவுக்கு வரும். ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி அன்பை பரிமாறும் நாம் இந்த முறை எதிலும் விலகி இருக்க வேண்டிய சூழலில் உள்ளோம் .வெளியில் கடைகளில் இனிப்பு பலகாரம் வாங்குவதை தவிர்த்தல் நல்லது முடிந்தவரை வீட்டிலேயே செய்து பகிர்ந்து உண்ணுவது நல்லது. வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
- தீபாவளி கொண்டாட்டத்தில் குழந்தைகள் மீது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. குழந்தைகளை வெளி நபர்களிடம் இருந்து விலக்கி வைக்க கூடிய தர்மசங்கடமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். மற்றவர் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை குழந்தைகள் உடல்நலம் முக்கியம். எனவே அதில் மட்டுமே நமது கவனம் தேவை.
- குடும்பத்தோடு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் விலகி இருந்து, அவரவர் வீட்டில் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்.
- காயத்ரி