மகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
இயேசு பிறப்பு விழாவான 'கிறிஸ்துமஸ்' கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாள். வீடுகளில் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல் என கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அப்போது, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விளக்கும் பாடல்களும் இசைக்கப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. குடில்கள் அமைக்கப்பட்டு இயேசுவின் பிறப்பு தத்ரூபமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதே போல், தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. புத்தாடை அணிந்து ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியடைந்தனர்.