அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதன் முறையாக செல்போனுக்கு தடை...ஜாமர் கருவிகள் அமைப்பு!!
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு முதல் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமர் அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் இருக்கும் அதன் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கபப்பட்டுள்ளது. ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம், செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அதன்படி இந்தக் கூட்டம் இன்று கூடுகிறது. என்றாலும், அதிமுகவிற்கு யார் தலைமை ஏற்பது, யார் பொதுச்செயலாளர், யார் முதல்வர் வேட்பாளர் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு முடிவு காணப்பட வேண்டியது இருக்கிறது.
அதிமுக ஆட்சி கடந்த ஐந்தாண்டுகளாக அமைதியாக நடைபெற்று வருகிறது என்றாலும் உள்கட்சிக்குள் தலைமைக்கு போட்டா போட்டி நடந்து வருவது சமீப காலத்தில் வெளிப்படையாக தெரிகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யபட்டு இருந்தார்.
இவர் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் தேர்தலில் ஆறு ஆண்டுகளுக்கு நிற்க முடியாது. இந்த சூழலில் கட்சிப் பொறுப்பை இனி இவர் ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்பு பிரிந்து இருந்த அதிமுகவை பாஜக ஒருங்கிணைத்தது என்று கூறப்பட்டது. இதுதான் தற்போதும் நடந்து வருகிறது என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.
தற்போது 2021ல் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளருக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. ஆதலால் இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இன்னும் தேர்தலுக்கு ஆறு மாதங்ககளுக்கு மேல் இருப்பதால் இன்று பொதுச்செயலாளர் தேர்வு கண்டிப்பாக இருக்காது. தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அந்த தீர்மானங்களில் முக்கியமாக விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடப்பாண்டு இறுதியில் நடத்தப்படும் என்று கூறப்படும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.