நீட் எழுத முடியாத கர்நாடக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு.. தமிழர்களுக்கு ஓரவஞ்சனை.. அரசு பாரபட்சம்!
ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுத முடியாமல் போன 500 கர்நாடக மாணவர்களுக்காக மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுத முடியாமல் போன 500 கர்நாடக மாணவர்களுக்காக மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு சென்ற வருடம் இதே போல மறு தேர்வு தேதிக்கு கோரிக்கை வைக்கப்பட்ட போது அதற்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை.
நாடு முழுக்க கடந்த 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறியும் அன்று நீட் தேர்வு நடைபெற்றது
நாடு முழுக்க 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதினார்கள்.
மாணவர்களே உங்களுக்கு என தனிச்சேனல்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
கர்நாடகா தேர்வு
இந்த நிலையில் கர்நாடகாவில் நீட் தேர்வு நடந்த போது 500க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. அங்கு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு சரியான நேரத்தில் ரயில் வராததால் தேர்வு எழுத முடியவில்லை. நீட் தேர்வு ஞாயிறு மதியம் 2 மணிக்கு நடந்தது. தேர்வு அறைக்கு 1.30 மணிக்கே சென்று இருக்க வேண்டும்.
ஹூப்ளி ரயில்
ஆனால் இதற்காக கர்நாடகாவில் பல பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் காலை வரக்கூடிய ஹூப்ளி எக்ஸ்பிரஸுக்காக பெங்களூரில் காத்து இருந்தனர். ஆனால் அந்த ரயில் தாமதமாக மதியம் 2.30 மணிக்கே வந்தது. இதனால் 500க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கடுமையான புகார் வைத்து இருந்தனர்.
மீண்டும் வாய்ப்பு
இந்த நிலையில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்காக மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது கர்நாடக மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மாணவர்கள் பாவம்
இதே போன்ற நிலையில்தான் சென்ற வருடம் தமிழக மாணவர்கள் சிக்கி இருந்தனர். நீட் எழுத சென்ற தமிழக மாணவர்களுக்கு வேறு வேறு ஊர்களில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் தேர்வை எழுத முடியாமல் போனது. ஒரு மாணவரின் அப்பா உட்பட மூன்று பேர் இதனால் பலியானார்கள்.
மிக மோசம்
அதேபோல் ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு தவறு காரணமாக தமிழில் தேர்வு எழுதிய பல நூறு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதற்கான கூடுதல் மதிப்பெண் கூட இந்த மாணவர்ளுக்கு சரியாக வழங்கப்படவில்லை. சென்ற வருட நீட் தேர்வே மிக மிக மோசமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் பாகுபாடு
ஆனால் அப்போதெல்லாம் மத்திய அரசு தமிழக மாணவர்கள் மீது கொஞ்சம் கூட கரிசனம் காட்டவில்லை. மாறாக தமிழக மாணவர்கள் சிலர் தொடுத்த வழக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்து, அவர்கள் பெற வேண்டிய மதிப்பெண்ணை கூட தட்டிப்பறித்தது. ஆனால் இப்போதோ கர்நாடக மாணவர்களுக்காக மறுதேர்வே நடத்த தயாராகி உள்ளது.