பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு... சொல்வது பிரேமலதா விஜயகாந்த்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் தவித்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு அண்டை மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும், சுவாமி தரிசனம் மற்றும் நேர்த்திக் கடன் செய்ய வருவது வழக்கம்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
எங்கே, முடிஞ்சா ஒரு செங்கல்லை வை பார்ப்போம்.. சேலஞ்ச் செய்த பிரேமலதா.. வழக்கு பதிந்த ஓசூர் போலீஸ்
விஜயகாந்த் குணமடைவார்
பூவராகவரை தேடி வந்து குறையை சொல்லிட்டாலே அது கண்டிப்பாக நிறைவேறும். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவது தான் இந்த கோயிலில் உள்ள சிறப்பு என்பதால் விரைவில் கேப்டன் விஜயகாந்த் குணமடைவார். கவலை வேண்டாம் என்று பிரேமலதாவிடம் பக்தர்கள் கூறினர். இதைக் கேட்டு பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரேமலதா அன்னதானம்
பிரேமலதா, விஜயபிரபாகரன் வருகையை அறிந்த உடன் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கோவிலின் முன்பாக காத்திருந்து அவர்களை வரவேற்றனர். தேமுதிக கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கேஸ் விலை உயர்வு
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நாளுக்கு நாள் அதிகாித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்க விஷயம் என்று கூறினார்.
Recommended Video
நடுத்தர மக்கள் பாதிப்பு
செங்கல், சிமெண்டு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் 40 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
நடவடிக்கை தேவை
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பிரேமலதா, திமுக ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி இருப்பதால் இப்போதைக்கு சாதகமும் இல்லை,பாதகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.