அ.ம.மு.க கூட்டணியில் மத்திய சென்னையில் களமிறங்கும் எஸ்டிபிஐ.. தெஹ்லான் பாகவி வேட்பாளர்
சென்னை: அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள 39 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவது என அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரும்பிய தொகுதிகளை பெற தவறிய தேமுதிக.. 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பே இல்லை!
அதேபோன்று, திமுக கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில், இன்று மாலை 20 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.
திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.