80 கார்களில் வந்து டார்ச் அடித்து பார்த்த மத்திய ஆய்வு குழு.. பாஷையும் புரியல! கொந்தளிப்பில் டெல்டா
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பார்வையிடச் சென்ற மத்திய ஆய்வுக் குழுவினர் மீது அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல், இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
நெல் உள்ளிட்ட தானியங்களை அழித்ததோடு மட்டுமின்றி, நீண்டகாலத்திற்கு பலன் தரக்கூடிய மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களையும் வேரோடு பிடுங்கி சாய்த்துவிட்டது.
சர்ச்சை
இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் மத்திய ஆய்வு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் புயல் தாக்கிய ஒரு வாரத்திலேயே வருகை தந்தது என்னவோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் ஆய்வு செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழு அதிகாரிகளுக்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் டெல்டா மாவட்டத்தில் இவர்கள் சந்தித்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், ஆங்கிலமோ, இந்தியோ தெரியவில்லை.
மொழிபெயர்ப்பாளரான அமைச்சர்
மொழிப் பிரச்சினை பெரும் பிரச்சினையாகி விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில், மத்திய குழு ஆய்வு நடத்தியபோது அமைச்சர் விஜயபாஸ்கர் மொழிபெயர்ப்பாளர் போல செயல்பட்டு மக்கள், தமிழில் கூறியதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான பகுதிகளிலும் மக்கள் தங்களது பிரச்சனையை சொல்லி புரிய வைக்க முடியவில்லை.
டார்ச் லைட்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, வடக்குப்பட்டி, கல்லிக்கொல்லை, பரமன் நகர் பகுதிகளில் மத்திய குழுவினர் இரவு 6.30 மணிக்கு மேல்தான் சென்றனர்.
அப்போது அங்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு சீராகவில்லை என்பதால், விளக்கு வெளிச்சம் இல்லை. சூரிய வெளிச்சமும் இல்லாததால் டார்ச், ஒளியை கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர். டார்ச் லைட் என்பது மிக மிகக் குறுகிய பரப்பளவில் மட்டுமே வெளிச்சம் பாய்ச்சக்கூடியது. அதை வைத்து இவ்வளவு பெரிய புயலின், சேதங்களை மதிப்பீடு செய்தது என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துச்சமென மதித்து இழிவு செய்து கொண்ட செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
80 கார்கள்
இந்த ஆய்வுக்குழுவினர் மொத்தம் 80 வாகனங்களில் சென்றுள்ளனர். ஆனால், திட்டமிடல் இல்லாமல் தங்கள் ரூட்டுகளை அவ்வப்போது மாற்றியபடி இருந்துள்ளனர். இதனால்தான், இரவு டார்ச் அடித்து சேத விவரங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 வாகனங்களில் ஆய்வுக்குழுவினர் சென்றது என்பது தமிழக பேரிடர் வரலாற்றில் முதல்முறையாக இருக்கக் கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், அதனால் கிட்டிய பலன், 'டார்ச் லைட் ஆய்வுதானா' என்று வேதனை தெரிவிக்கிறார்கள், மக்கள்.
எப்படி வரும் நிதி
மக்களின் வேதனையை புரிந்து கொள்ளாமல், சேத மதிப்பை சரியாக அறிந்து கொள்ளாமல் இந்த மத்திய குழு வழங்கும் அறிக்கையை பரிசீலித்து தான் மத்திய அரசு நிவாரணம் வழங்க போகிறது. மத்திய குழு, யானை பங்குக்கு பரிந்துரைத்தாலே, எலி அளவுக்குத்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால் மத்திய குழுவே ஒழுங்காக பரிசோதனை செய்யாத நிலையில், அதன் பரிந்துரை எலி அளவுக்குத்தான் இருக்கப்போகிறது. அப்படியானால் மத்திய அரசு கொடுக்கும் தொகை எறும்பு அளவுக்குத் தான் இருக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது.