கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை!
சென்னை: கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.
கஜா புயல் காரணமாக தமிழகம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இதுவரை முழுமையாக மீட்பு பணிகள் முடிவடையவில்லை. நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் மின் இணைப்பு கூட சீராகவில்லை.
இவ்வளவு பாதிப்புகளை சந்தித்திருந்தாலும், மத்திய குழு இதுவரை வந்து பார்வையிடவில்லை. இந்த நிலையில்தான், புயல் நிவாரண உதவி கேட்டு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசிடம் தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.1500 கோடியும், மொத்தம், 15,000 கோடி ரூபாய் நிவாரண தொகையும், கேட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த நிலையில், நாளை மாலை மத்திய குழு தமிழகம் வருகிறது. குழு அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் விவரம் இதுவரை தெரியவில்லை.
நாளை மாலை சென்னை வரும் மத்திய குழு, முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கிறது. பின்னர், நாளை மறுநாள், சனிக்கிழமை, அல்லது திங்கள்கிழமைதான், புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு நடத்தி, ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கும். அதன்பிறகுதான், மத்திய அரசு, தமிழகத்திற்கான நிவாரண தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.