கஜா புயல் பாதிப்பு.. ஆய்வை தொடங்கவுள்ள மத்திய குழு.. முதலில் செல்வது எந்த பகுதி?
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று இரவு சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தவிர பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.
உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி கேட்டு டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
புயலால் பல்வேறு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று அவர் மோடியிடம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறார் மோடி.
நேற்று இரவு இந்தக் குழு சென்னை வந்தது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேணியல் ரிச்சர்ட் தலைமையிலான இக்குழுவில் உறுப்பினர்களாக கவுல், வாஸ்தவா, ஹர்ஷா, இளவரசன், மாணிக் சந்திரா, வந்தனா சிங்கால் என மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 7 பேரும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து முதலில் புதுக்கோட்டைக்கு செல்லும் இந்த குழு பின்னர் மற்ற புயல் பாதித்த மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு பணிகளை செய்வர். இதைத் தொடர்ந்து ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பர் என தெரிகிறது. அதற்கேற்ப மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யும்.