கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு.. முத்தரசன் கடும் கண்டனம்
சென்னை: மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த நினைக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு, எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழக அரசு மவுனம் காப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மோடியின் பாஜக ஆட்சி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டா பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கு ஆதரவாக, பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். உணவு பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்படும், கடல் நீர் உட்புகுந்து, உப்பு மண்ணாகி சாகுபடி ஏதும் செய்ய முடியாத நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றாகிவிட்டது
சூறாவளி காற்று சுழன்றடிக்க பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை
பின்னரும் கடந்த 10-ம் தேதி நாகை, கடலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கார்ப்ரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு ஆதரவாக செயல்படும் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதியளித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனை எல்லாம் பார்த்தும் பார்காதது போல இவ்விகாரத்தில் மவுனம் காப்பதன் மூலம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறதா என்பதனை தெளிவுபடுத்திட வேண்டும் என அறிக்கையில் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.