சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை மரண வழக்கை சிபிஐ ஏற்று நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு ஏற்ப சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் பணியில் இருந்த போலீசார் கடுமையாக தாக்கினர். பொது முடக்க நேரத்திற்கும் கூடுதலாக கடைகளை திறந்து வைத்து இருந்தனர் என்பது அவர்களது மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. கொடூரமான முறையில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு தந்தை, மகன் இருவரும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் இருவரும் மரணம் அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தானாக முன்வந்து ஏற்றது. சிபிஐ இந்த விசாரணையை ஏற்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பென்னிக்ஸின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.