கேட்டது மலை அளவு.. கொடுத்தது லெமன் அளவு.. மத்திய அரசு டூ பேட்- ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை: கஜா புயல் நிவாரணமாக மலை அளவு நிதி கேட்ட நிலையில் மத்திய அரசோ லெமன் அளவு கொடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் தினந்தோறும் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அதுபோல் அவர் நேற்றும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கஜா புயலால் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசின் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாறவே இல்லை
புயல் பாதித்த இடங்களில் அதிமுக நிர்வாகிகள் நேரடியாக சென்று நிவாரணம் அளித்து வருகின்றனர். ஆனால் டிடிவி தினகரனோ காரை விட்டு இறங்காமல் புயல் பாதித்த இடங்களில் பொய்யான பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். அவர் பழக்கம் மாறவே இல்லை.
நிவாரணம்
ஆர்கே நகரில் டோக்கன் கொடுத்தது போல் கஜா புயல் பாதித்த மாவட்டங்களிலும் நிவாரணத்துக்கு டோக்கன் வழங்கியுள்ளார். ஆனால் நிவாரணம் கிடைத்ததா என்றால் தெரியவில்லை. புயல் பாதித்த இடங்களில் விடுபட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும்.
உதவி
இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு டூ பேட். மிகவும் கண்டனத்துக்குரியது. மாநிலத்தின் உரிமையை கேட்கிறோம். புயல் பாதித்துள்ள மக்களுக்கு நிவாரணம் கேட்டும் அது கிடைக்கவில்லை. அதில் ஒரு பகுதியை அவர்கள் வழங்கியிருந்தால் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கும்.
கிடைத்தது லெமன்
ரூ. 352 கோடி ரூபாய் கொடுத்தது மிகவும் குறைவான தொகை. கேட்டது மலை அளவு, கொடுத்தது எலுமிச்சை அளவு. முறையாக அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடமிருந்து முழு தொகையை பெற போராடுவோம் என்றார் ஜெயக்குமார்.