நாடாளுமன்றத்தில் மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றும் மத்திய அரசு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்
சென்னை: முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதாக்கள் மீது விவாதம் நடத்தாமல் மத்திய அரசு அவசர கதியில் நிறைவேற்றி வருவதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் 18 மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றியிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து வரும் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இது பற்றி செய்தியாளரிடம் பேசிய அக்கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ மாணவர்களுடைய படிப்பிலே மண்ணை போடுகிற வகையில் தற்போது மருத்துவ கவுன்சில் மசோதா அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது
இந்த ஒன்றரை மாதங்களில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கருத்துகளை கேட்காமல் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
தேசியப் புலனாய்வுச் சட்டம், முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டம் அணைகள் பாதுகாப்பு சட்டம், மோட்டார் வாகன சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்குவதையும், திருத்தங்கள் செய்வதையும் உரிய விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது.
மோடி அரசு தனது அரசியல் மற்றும் அடக்குமுறை நோக்கங்களுக்காகவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நிறைவேற்றவும் சட்ட விரோத அம்சங்களை சட்டத் திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொண்டிருக்கிறது.
பொதுவாக சட்டங்கள் நிறைவேற்றும் முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினால் நிலைக்குழுவுக்கும், தெரிவுக்குழுவுக்கும் அனுப்பிய பிறகு தான் நிறைவேற்றப்படும். ஆனால் அக்குழுக்களுக்கு அனுப்ப வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதும் அவை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மோடி அரசின் மோசமான நடவடிக்கையை கண்டித்து 6-ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன இயக்கம் நடத்தப்படும் என்றார்
மேலும் மத்திய அரசு தன்னிச்சையான போக்கில் செயல்படுவதாக பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அணுகுமுறையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.