புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம்... மத்திய அரசு அனுமதி
சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. அதேவேளையில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டுமே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல் ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் சுற்றுலாபயணிகள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை மாநில அரசுகள் தான் ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே மஹாராஷ்டிரா, சூரத் போன்ற நகரங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போர்க்கொடி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி ஒரே இடத்தில் தங்களால் அடைபட்டு கிடக்க முடியாது என புலம் பெயர் தொழிலாளர்கள் சூரத் வீதிகளில் இறங்கி போர்க்குரல் உயர்த்தினர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்கும் மேல் தொழிலாளர்கள் முடங்கிகிடக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றும், அதற்கு முன்பாகவே அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
புலம் பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படும் பேருந்துகளை கிருமிநாசினியை கொண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பேருந்துகளில் தொழிலாளர்களை கூட்டமாக அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வராது என்றும், இன்னும் சில வாரங்கள் அது நீட்டிக்கப்படக்கூடும் எனவும் தெரிகிறது.