கற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்
சென்னை: 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பொருளதார ரீதியாக மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. டிமானிஷ்டேசனை விட மோசமான பாதிப்பை எதிர்க்கொள்ள இந்தியா தயராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி வாழ்கிறார்கள். எனவே ஏழை மக்கள் அனைவருக்கு அனைத்து ஊர்களிலும் இப்போதைய முதல் தேவை உணவு. போர்க்கால அடிப்படையில் தினமும் மூன்று நேரமும் அரசே உணவு அளிக்க வேண்டும். இதைதவிர வேறு எந்த நிவாரணமும் மக்களை இப்போதைக்கு காப்பாற்றுமா என்பது சந்தேகம் தான்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். கொரானாவால் ஏற்பட போகும் பாதிப்பு ஒரு பக்கம் என்றால் ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி கிடக்கிறது.
வட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்!
சட்டம் இல்லை
கார்ப்பரேட் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குவோர் வேண்டுமானால் முழு ஊதியத்தை பெற்றுவிட முடியும்.ஆனால் தொழிற்சாலைகளில், கடைகளில் அன்றாடம் வேலை செய்தால் தான் சம்பளம் என்று இருக்கும் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அந்த நிறுவனங்கள் கொடுக்குமா என்பது கேள்வி குறியே. உற்பத்தியே இல்லாமல் நஷ்டத்தை சந்தித்த அவர்கள் சம்பளத்தை பல ஆயிரம் பேருக்கு தூக்கி கொடுப்பார்களா என்பதே பெரும் கேள்வி. ஏனெனில் அரசு மாத சம்பளத்தை முழுவதுமாக கொடுக்க வேண்டும் எனறு கோரிக்கை தான் வைத்துள்ளது. முழுசாக கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றவில்லை. உத்தரவும் போடவில்லை.
21 நாள் வேலை இழப்பு
மாத சம்பளதாரர்கள் ஒருபக்கம் என்றால் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை ஓட்டு மக்கள், ஆட்டோ ஓட்டுவோர், டாக்ஸி ஓட்டுவோர், கட்டிட வேலைக்கு செல்வோர், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், மில்களில் காண்ட்ராக்டராக பணிகளை செய்யும் மக்கள் , சினன சின்ன கையேந்தி பவன்கள் வைத்திருப்பவர்கள் என அன்றாடம் காய்ச்சிகளாக வாழும் மக்கள் இந்த 21 நாள் வேலை இழப்பை தாங்குவது மிக கடினமானது. என்ன தான் அரசு நிவாரணங்களை அறிவித்தாலும் அந்த நிவாரணம் எல்லாம் 1 மாதம் அவர்களுக்கு உணவு அளித்துவிடாது. அதன்பிறகு ஏற்பட போகும் பாதிப்புக்கு நிவாரணம் அளித்துவிடாது.
3 வேளை உணவு
எனவே அரசு ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரம் என அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் ஏழை மக்கள் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு மூன்று வேளை உணவுக்கு வழியை காட்ட வேண்டும். அப்போது தான் மக்கள் இந்த பேராபத்தில் இருந்து மீண்டு வர உதவும். பொருளாதார ரீதியாக தொழில் அதிபர்களுக்கு, பெரும் நிறுவனங்களுக்கு, அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, பெரிய கடைகளுக்கு, ஹோட்டல்களுக்கு, மாத சம்பளம் வாங்குவோருக்கு எல்லாம் எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்படும். கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளில் எல்லாருக்கும் சேர்த்து இழப்பு ஏற்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்றாட மக்களுக்கு வாழ்க்கையையே இழந்துள்ளார்கள். இதில் இருந்து மீள்வது என்பது மிகமிக கடினமானது.
உணவுதான்
ஏழைகளில் இழப்பதற்கு உயிரை தவிர ஏதும் இல்லை என்பதே நிஜம். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் ஏழைகள் அனைவரையும் காப்பாற்ற உணவு வழங்க வேண்டும். பசி இல்லை என்ற நிலை ஒருவருக்கு இருந்தால் பாதி பிரச்னை தீரும். அழும் குழந்தைக்கு பாலும், ஏழைக்கு உணவுமே இந்த மோசமான நெருக்கடியில் இருந்து வர உதவும் ஒரே ஆயுதம்.
Recommended Video
ஊரடங்கை போல்
இவ்வளவு தூரம் சொல்ல காரணம் தமிழகத்தை போல் எல்லா மாநிலங்களும் பொருளாதார ரீதியாக பலமான மாநிலங்கள் அல்ல. அடுத்த நாள் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலை தான் இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களின் நிலை உள்ளது. கொரோனா வைரஸை தடுக்க எந்த அளவுக்கு ஊரடங்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த மக்களை காப்பாற்ற அரசு அளிக்கும் நிவாரணமும் முக்கியம். ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் 3மாதம் 500 ரூபாயும், சிலிண்டரும் அளித்தால் போதாது. ஏனெனில் இந்த இரண்டிலும் இல்லாதவர்கள் பல கோடி மக்கள். இதை தவிர மாநில அரசு அளிக்கும் ரூ.1000 நிவாரணமும் போதாது. இவை எல்லாம் யானை பசிக்கு சோளபொறி என்பதே மறுக்க முடியாத உண்மை.