மத்திய நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு.. தமிழகத்திற்கு ஏன் பொருந்தாது? விளக்கும் பாஜக பிரமுகர்!
சென்னை: மத்திய நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும், ஜூன் 30ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும்.
விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஒருவேளை, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், தனி வீடு வைத்திருப்போர், குடியிருப்புதாரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக, அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்துகொள்ளாமல் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளிமாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது.
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்கிறது. இந்த விளம்பரம் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.