அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது… 2 மணி நேர பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் லோக்சபா தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய சென்னை வந்திருக்கிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2ம் கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்தார்.
பியூஷ் கோயலுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முரளிதர ராவ் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பாஜக தரப்பில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் முடிவில்... 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் பாஜக தலைவர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய ஓபிஎஸ் பேசியதாவது :வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தமது ஆதரவை பாஜக வழங்கி உள்ளது என்று கூறினார்.
அதன்பிறகு கூட்டணி குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றுவிட்டார்.பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.