நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை
நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர். மத்திய குழு புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது. கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மரக்காணம் புதுச்சேரி இடையே நிவர் புயல் கரையை கடந்தது. புயலின் கோரத்தாண்டவத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும்தான். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பப்பாளி மரங்களும், வாழை மரங்களும் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்து விட்டன.
பன்னீர் கரும்புகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். சேதமடைந்த பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் தடை
இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை டிசம்பர் 1 ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்கிறது. 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையிலான இந்த குழுவில், மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரி, மத்திய நிதித்துறை அதிகாரி, மத்திய மின்சாரத்துறை அதிகாரி மத்திய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி, மீன்வளத்துறை அதிகாரி, நீர் வளத்துறை அதிகாரி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நவம்பர் 30ஆம் தமிழகம் வரும் மத்தியக்குழு டிசம்பர் 1ஆம் தேதி நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. மத்திய குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.