ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில்பெட்டிகளை மாற்றுவதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுக்கும் நடவடிக்கை நாடெங்கும் மேற்கொள்ளப்படும் நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது. இதில் 5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை அறிவிப்பில் 5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றும் இலக்கில், 2500 பெட்டிகளை அவ்வாறு குறுகிய கால அவகாசத்தில் மாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக அவற்றை மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் இல்லாத இடங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்த போது, வழக்கு குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.