சென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
சென்னை - சேலம் வரை போடப்பட உள்ள 8 வழி சாலையால் மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இதற்கு எதிரான வழக்குகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அதே பசுமை சாலை திட்டத்தின் கீழ் சென்னை - தூத்துக்குடி 8 வழி சாலை போடப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மூன்று வகை
இந்த சாலை திட்டம் மூன்று விதமாக போடப்பட உள்ளது. சென்னை - விழுப்புரம் வரை 10 வழி சாலை போடப்படுகிறது. விழுப்புரம் - தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை போடப்படுகிறது. திருச்சி - தூத்துக்குடி 6 வழி சாலை போடப்படுகிறது.
என்ன வழி
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை 600-700 கிமீ தூரத்திற்கு இந்த சாலை திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பண்ட்ருட்டி, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை ஆகிய பகுதிகள் வழியாக இந்த சாலை போடப்பட உள்ளது. மொத்தம் 100 கிமீ அளவிற்கு மொத்த பயண தூரம் இதனால் குறையும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
எவ்வளவு செலவு
இதற்கான பட்ஜெட் தொகை மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்காக 13,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. தூத்துக்குடியில் இருந்து சாலை பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
பிரச்சனை ஆக வாய்ப்பு
5 வருடங்களில் சாலை கட்டுமானம் முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் நிறைய மரங்கள் வெட்டப்பட வாய்ப்புள்ளதாலும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இதற்கு எதிர்ப்பு எழும் என்று கூறப்பட்டுள்ளது.