கொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர்
சென்னை: கொரோனா 2-வது அலையில் உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசின் அணுகுமுறையாக இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:
தீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி!
கொரோனா முதல் அலையின் போது உருவாக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டமைப்புகள் அக்டோபர் 2020 க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. இரண்டாவது அலை தொடங்கியபோது எஞ்சியிருந்த கட்டமைப்புகள் போதுமானவை அல்ல என்பது அம்பலமாகியது.
பரிசோதனைகள் குறைவு
முதல் அலை ஓய்ந்த போது பரிசோதனைகள் தொய்வடைந்தன. பரிசோதனை மாதிரிகள் குறையும் போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும் தானே? வெயில் அடித்த போது கூரையை செப்பனி செய்யவில்லையென்றால், அட மழை பெய்யும் போது கூரை ஒழுகும் தானே?
தடுப்பூசிகள் குறைவு
தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2ம் நாள் 42 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 இலட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம் தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது
ஒரு திட்டமும் இல்லை
எதிர்கால தேவைகளுக்கு - ஆக்ஸிஜன், வென்டிலேடர், தடுப்பூசிகள், வாகனங்கள் - திட்டமிடவில்லை. தேவையான செவிலிகளை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை
3,4-வது அலைகளை எதிர்கொள்ள முடியாது
இரண்டாவது அலை தொடங்கிய போது இதுவும் முதல் அலை போன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்து விடும் என்று அரசு கருதியது. ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை. மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது
பொறுப்பில் இருந்து நழுவுதல்
பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு I.C.E. என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும், அது அரசிடம் இல்லை. முதல் அலையின் போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன. இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். விளைவு: பெருங் குழப்பம். இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.