புதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு
சென்னை: அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தையே பாதிக்கும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது..
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீீடு வழங்குவது தொடர்பாக புதுவை அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவில் உடன்படாததால் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்..
இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த 12 ம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி என்பவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2016 -17 ம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் பயின்ற 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தனியார் பள்ளியில் பயின்ற மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அதில்,10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரீசீலனையில் உள்ளதாகவும், முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதால்,இந்த விவகாரம் மத்திய குடும்ப நல அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அவர்களின் ஆலோசனைகளை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மெரிட் என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தை பாதிக்கும் எனவும் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கணும்..உயர்நீதிமன்றம் உத்தரவு!
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்த கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்த வாய்ப்பு குறைவு எனவும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்றும் கோரினார். மாணவ மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மத்திய அரசு காலம் கடத்தி வருவது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் எனவும், மாநில அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும்,இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
கடந்த 2016 ல் இருந்து தற்போது வரை புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு கூட அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.. தொடர்ந்து, 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.