உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ1573 கோடி நிதி குறைப்பு- சிஏஜி அறிக்கை
சென்னை : உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தாததால் 2017-18ம் ஆண்டு ரூ1573 கோடி நிதியை மத்திய அரசு குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.
லோக்சபாவில் திமுக எம்.பி. ஆ. ராசா இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது மத்திய அரசு தரப்பில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க முடியாது என கூறியது.
மேலும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான நிதியில் ரூ1573 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய நிதிக் குழு பரிந்துரைத்தது.
நிதிக்குழுவின் பரிந்துரையை மீறி மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாததால் மத்திய அரசு நிதியை குறைத்திருக்கிறது எனும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.