பாஜகவின் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டம் உள்நோக்கம் கொண்டது- அபாயகரமானது: ப. சிதம்பரம்
சென்னை: மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கும் 2020-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டம் உள்நோக்கம் கொண்டது; அபாயகரமானது என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான 2010-ம் ஆண்டு வீடியோவை பாஜக வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வீடியோவில், நாட்டின் குடிமக்கள் தங்களை பதிவு செய்து கொள்வது குறித்துதான் விளக்கப்பட்டிருக்கிறது.
The BJP-led government has a larger and more sinister agenda and that is why the NPR approved by them yesterday is very dangerous and different in terms of the TEXT as well as the CONTEXT of NPR 2010.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 26, 2019
மக்களின் குடியுரிமை தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உதவியாகத்தான் 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது.
ஆனால் 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது பாஜக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கும் 2020-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பதிவேடு. இது உள்நோக்கம் கொண்டது; அபாயகரமானது.
அப்படி பாஜகவுக்கு எந்த உள்நோக்கமுமே இல்லை எனில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தற்போது ஒப்புதல் அளித்திருக்கும் மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எந்த தொடர்புமே இல்லை என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.